சுங்கான்கடை அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு அதிகாரி ஆய்வு


சுங்கான்கடை அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 14 Oct 2019 11:00 PM GMT (Updated: 14 Oct 2019 9:54 PM GMT)

சுங்கான்கடை அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு ஏற்பட்டது.

அழகியமண்டபம்,

சுங்கான்கடை அருகே களியங்காடு பகுதியில் கிரிச்சான் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தில் உள்ள நீரை சுற்றுவட்டார பகுதி மக்கள் குடிநீருக்கும், பாசனத்துக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென்று குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக்க தொடங்கின. மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மீன்கள் சாவுக்கான காரணம் தெரியவில்லை.

அதிகாரி ஆய்வு

தொடர்ந்து குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால், அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்று பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள், போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

இந்தநிலையில் ஆளுர் பஞ்சாயத்து செயல் அலுவலர் அம்புஜம் நேற்று குளத்தை பார்வையிட்டார். கழிவுநீர் ஏதும் குளத்தில் கலக்கிறதா? என்று ஆய்வு செய்தார். மேலும் குளத்தில் மீன்கள் சாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.

Next Story