கலெக்டர் உத்தரவிட்டும் ரெயில் நிலையத்திற்கு இயக்கப்படாத அரசு பஸ்கள்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


கலெக்டர் உத்தரவிட்டும் ரெயில் நிலையத்திற்கு இயக்கப்படாத அரசு பஸ்கள்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Oct 2019 10:45 PM GMT (Updated: 14 Oct 2019 10:34 PM GMT)

விருதுநகர் ரெயில் நிலையத்திற்கு அரசு பஸ்கள் இயக்க கலெக்டர் உத்தரவிட்ட பின்னரும் நடவடிக்கை எடுக்காத நிலை உள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

கடந்த மாதம் கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சாலை போக்குவரத்து ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் அழகுசுந்தரம் வலியுறுத்தியதன் பேரில் ரெயில் நிலையத்திற்கு அரசு போக்குவரத்து கழக பஸ்களை இயக்குமாறு கலெக்டர் சிவஞானம் உத்தரவிட்டார். போக்குவரத்து கழக நிர்வாக அதிகாரிகள் பஸ்கள் இயக்கப்படுவதாக தவறான தகவலை தெரிவித்த நிலையில் கலெக்டர் உடனடியாக இது குறித்து ஆய்வு செய்து பஸ்களை இயக்கி அறிக்கை சமர்பிக்குமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தினார். ஆனாலும் இதுவரை ரெயில் நிலையத்திற்கு உரிய எண்ணிக்கையில் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படாத நிலை நீடிக்கிறது.

இதனால் ரெயில் நிலையத்திற்கு நெடுந்தூரத்தில் இருந்து வரும் பயணிகள் மற்றும் ரெயிலில் வந்து இறங்கும் பயணிகள் விருதுநகர் பஸ் நிலையத்திற்கு வருவதற்கும் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கும் சிரமப்படும் நிலை நீடிக்கிறது. தற்போது ரெயில்வே மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் காரியாபட்டியில் இருந்து வரும் பஸ்கள் பழைய பஸ் நிலையத்திற்கு ரெயில்வே பீடர் ரோடு வழியாக வரும் நிலையில் இந்த பஸ்களை ரெயில் நிலையத்திற்கு சென்று வர ஏற்பாடு செய்யலாம். இதே போன்று திருமங்கலம் செல்லும் பஸ்களும் ரெயில் நிலையத்திற்கு சென்று அதன் பின்னர் திருமங்கலம் செல்ல ஏற்பாடு செய்யலாம்.

தனியாக ரெயில் நிலையத்திற்கு பஸ்கள் இயக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும் ரெயில் நிலையத்தை ஒட்டி செல்லும் பஸ்களை ரெயில் நிலையத்திற்கு சென்று செல்ல ஏற்பாடு செய்தால் வசதியாக இருக்கும்.

எனவே மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்ட படி ரெயில் நிலையத்திற்கு போக்குவரத்து கழக பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக அதிகாரிகள் கலெக்டரிடம் பஸ்களை இயக்குவதாக தெரிவித்தாலும் அதன் பின்னர் பாராமுகமகவே உள்ளனர்.

எனவே இது குறித்தும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story