தூத்துக்குடி மாவட்டத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


தூத்துக்குடி மாவட்டத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 16 Oct 2019 10:30 PM GMT (Updated: 16 Oct 2019 9:41 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி சிவந்தாகுளம் சந்தணமாரியம்மன் கோவில் அருகே முருகேசன் (வயது 38), விவேக் (42) ஆகியோர் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான முனியசாமிபுரம் லோகியா நகரை சேர்ந்த மாணிக்கம் செல்லையா மகன் மாணிக்கராஜா என்ற மணிகண்டன் (22), தூத்துக்குடி பிரையண்ட்நகர் 8-வது தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரிசெல்வம் (25) ஆகியோரை தென்பாகம் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

புதுக்கோட்டை அருகே உள்ள குலையன்கரிசலை சேர்ந்தவர் துரைப்பழம். இவருடைய மகன் செல்வக்குமார் (35). இவர் கூட்டாம்புளி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, தூத்துக்குடி 3-வது மைலை சேர்ந்த வேலுச்சாமி மகன் காளியப்பன் (25) என்பவர் வழிமறித்து பணம் கேட்டு, வாளால் தாக்க முயன்றார். இதனால் புதுக்கோட்டை போலீசார் காளியப்பனை கைது செய்தனர்.

இதேபோன்று ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கீழபுத்தனேரியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் முருகன் என்ற படுகையூர் முருகன் (25). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது வல்லநாடு பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இவர்கள் 4 பேரும் தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் பரிந்துரை செய்தார். அதை ஏற்று, மாணிக்கராஜா, மாரிசெல்வம், காளியப்பன், முருகன் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகலை இன்ஸ்பெக்டர்கள் கிரு‌‌ஷ்ணகுமார்(தென்பாகம்), திருமலை(புதுக்கோட்டை), பார்த்திபன்(முறப்பநாடு) ஆகியோர் பாளையங்கோட்டை சிறையில் அதிகாரிகளிடம் வழங்கினர். இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை 65 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Next Story