டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 16 Oct 2019 11:00 PM GMT (Updated: 16 Oct 2019 9:55 PM GMT)

சேலத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சேலம்,

சேலம் மாநகராட்சி 45-வது வார்டுக்கு உட்பட்ட குகை பஞ்சதாங்கி ஏரி, எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேட்டை சரி செய்ய வேண்டும், சிவனார் தெருவில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரியும் நேற்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். அங்கு நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, குகை பஞ்சதாங்கி ஏரி பகுதியில் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவுகிறது. சுகாதார பணிகள் சரிவர மேற்கொள்வது இல்லை. இதை சீர் செய்யவும், குடியிருப்புகள் மத்தியில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் ஏற்கனவே பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வந்துள்ளோம், என்றனர்.

கலெக்டரிடம் மனு

இதைத்தொடர்ந்து 45-வது வார்டு குகை ஓபுளி செட்டி தெருவை சேர்ந்த ஆட்டோ ராஜா என்பவரது தலைமையில் பொதுமக்கள் கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அதில், கூறியிருப்பதாவது:-

சேலம் குகை பஞ்சதாங்கி ஏரி பகுதியில் நரிக்குறவர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆனால் சுகாதார பணிகள் சரிவர நடைபெறாமல் உள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சலால் நிறைய நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தெருக்களில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கவில்லை. எனவே, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சிவனார் தெருவில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையால் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள், வீட்டை விட்டு வெளியே வர பயப்படுகின்றனர். வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக பெண்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

டாஸ்மாக் கடை

ஏற்கனவே, குடியிருப்புகள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அந்த மதுக்கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story