நாகையில் நியாயவிலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


நாகையில் நியாயவிலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2019 11:00 PM GMT (Updated: 17 Oct 2019 6:51 PM GMT)

நாகையில் நியாயவிலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

ஊதியக்குழு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம், தனித்துறை ஏற்படுத்த வேண்டும். நியாயவிலை கடைகளுக்கு வழங்கும் பொருட்கள் அனைத்தும் பொட்டலங்களில் அடைத்து வினியோகம் செய்ய வேண்டும். அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நாகையை தலைமையிடமாக கொண்டுள்ள நாகை பொதுப்பணியாளர் கூட்டுறவு பண்டகசாலையை மொத்த விற்பனை கூட்டுறவு பண்டகசாலையாக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று நாகை புதிய பஸ் நிலையம் அருகே அவுரித்திடலில் நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமிழ்செழியன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஆடியபாதம், பழனிவேல், தியாகராஜன், சீத்தாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுரே‌‌ஷ்கண்ணன் வரவேற்றார். இதில் மாநில துணைத்தலைவர் பிரகா‌‌ஷ் கலந்துகொண்டு பேசினார்.

பொதுமக்கள் அவதி

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதில் நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தை சேர்ந்த குமார், மோகன்தாஸ், மாநில நிர்வாக குழு உறுப்பினர் பாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கஜபதி நன்றி கூறினார். நியாயவிலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்டத்தில் உள்ள 656 ரே‌‌ஷன் கடைகளில் 326 கடைகள் மூடப்பட்டன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

Next Story