சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 1½ கிலோ தங்கம்


சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 1½ கிலோ தங்கம்
x
தினத்தந்தி 17 Oct 2019 11:00 PM GMT (Updated: 17 Oct 2019 7:37 PM GMT)

சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கேட்பாரற்று 1½ கிலோ தங்கம் கிடந்தது. அதை கைப்பற்றிய அதிகாரிகள், அதை கடத்தி வந்தது யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செம்பட்டு,

சார்ஜாவில் இருந்து தினமும் அதிகாலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடையும். இதேபோல் நேற்று அதிகாலை சார்ஜாவில் இருந்து அந்த விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதைத்தொடர்ந்து விமானத்தை தூய்மைப்படுத்துவதற்காக துப்புரவு பணியாளர்கள் சென்றபோது, விமானத்தின் உள்ளே ஒரு கவர் கிடந்தது. கேட்பாரற்று கிடந்த அந்த கவரை பிரித்து பார்த்தபோது அதற்குள் பசை போன்ற பொருள் இருந்தது.

1½ கிலோ தங்கம்

உடனே அவர்கள், அந்த கவரை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, பசை வடிவில் இருப்பது தங்கம் என்று தெரிய வந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை அதிகாரிகள் பிரித்து எடுத்தனர்.

அப்போது அதில் இருந்து 1½ கிலோ தங்கம் கிடைத்தது. அதன் மதிப்பு ரூ.57 லட்சம் ஆகும். இதைத்தொடர்ந்து அந்த தங்கத்தை கைப்பற்றி, அதை கடத்தி வந்தது யார்? எதற்காக விமானத்தில் அதை விட்டு சென்றனர்? என்று அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.


Next Story