காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 17 Oct 2019 11:00 PM GMT (Updated: 17 Oct 2019 8:58 PM GMT)

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிெராலியாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

பென்னாகரம்,

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து நேற்று காலை 8 மணிக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

32 ஆயிரம் கனஅடி

நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. குறிப்பாக மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிக்கு செல்லும் நடைபாைதயை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அங்குள்ள காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்

பரிசல் இயக்க தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் நேற்று தடை விதித்தது. மேலும் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் மெயின் அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது.


Next Story