விடுதலைப்புலிகள் மீதான தடை அர்த்தமற்றது - மதுரையில் வைகோ பேட்டி


விடுதலைப்புலிகள் மீதான தடை அர்த்தமற்றது - மதுரையில் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 18 Oct 2019 11:30 PM GMT (Updated: 18 Oct 2019 7:39 PM GMT)

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை அர்த்தமற்றது என மதுரையில் வைகோ கூறினார்.

மதுரை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதை அடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் மத்திய அரசு தடை விதித்தது. மேலும் தடைக்காலம் முடிவடையும் நேரத்தில் தடை நீட்டிப்பு தொடர்பாக கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தடை நீட்டிப்பு தொடர்பான, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நேற்று மதுரையில் தொடங்கியது. மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் 4 நாட்கள் இந்த கூட்டம் நடைபெறும். விசாரணைக்கு டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சங்கீதா திங்ரா சாகல் தலைமை தாங்கி கருத்து கேட்டு வருகிறார். நேற்று நடைபெற்ற தீர்ப்பாய முதல் அமர்வில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார். விசாரணை முடிவடைந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த அமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வாதிடுவதற்கான விசாரணையில் நான் பங்கேற்றுள்ளேன். எனது கருத்தை எடுத்து வைப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி உறுதி அளித்துள்ளார். தீர்ப்பாய விசாரணையில் நாடு கடந்த தமிழீழ அமைப்பின் தலைவர் உருத்திர குமாரன் சார்பில் உச்சநீதிமன்ற வக்கீல் பாரிவேந்தனும் ஆஜராகியுள்ளார். இது வரவேற்கத்தக்கது.

விடுதலைப்புலிகள் மீதான தடையை தொடர்ந்து நீட்டிக்கவே மத்திய அரசு விரும்புகிறது. அதனால்தான் தடைக்காலம் 2 ஆண்டுகள் என்று இருந்ததை 5 ஆண்டுகள் என்று மாற்றியது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை அர்த்தமற்றது. தமிழகம் மற்றும் இலங்கையின் வடக்கு, தெற்கு மாகாணங்களையும் இணைத்து தமிழீழம் ஏற்படுத்தப் போவதாகக்கூறித்தான் தடை விதிக்கப்பட்டது. இப்போது அந்த குற்றச்சாட்டே தகர்ந்து விட்டது. எனவே தடையை நீக்க வேண்டும் என்று வாதிடுவோம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் செய்யாத தவறுக்காக 7 தமிழர்கள் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுவிக்க மறுப்பது மனிதாபிமானமற்ற செயல். பஞ்சாபில் படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே 7 தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதற்கேற்றவாறு மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story