வாணாபுரம் அருகே, பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த பிளஸ்-2 மாணவர் மயங்கி விழுந்து சாவு


வாணாபுரம் அருகே, பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த பிளஸ்-2 மாணவர் மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 18 Oct 2019 10:45 PM GMT (Updated: 18 Oct 2019 9:40 PM GMT)

வாணாபுரம் அருகே பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த பிளஸ்-2 மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணாபுரம்,

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள பெருந்துறைப்பட்டு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். அவருடைய மகன் அபிவி‌‌ஷ்ணு (வயது 17). இவர், தண்டராம்பட்டு அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் அபிவி‌‌ஷ்ணு பள்ளிக்கு சென்றார்.

பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் மாணவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அபிவி‌‌ஷ்ணு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலை பெருந்துறைப்பட்டு பஸ் நிறுத்தம் எதிரில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும் மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். அதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story