அ.தி.மு.க. தொண்டர்களின் நாவில் தேன் தடவுகிறார்; மு.க.ஸ்டாலின் மீது அன்பழகன் தாக்கு


அ.தி.மு.க. தொண்டர்களின் நாவில் தேன் தடவுகிறார்; மு.க.ஸ்டாலின் மீது அன்பழகன் தாக்கு
x
தினத்தந்தி 18 Oct 2019 11:00 PM GMT (Updated: 18 Oct 2019 10:38 PM GMT)

அ.தி.மு.க. தொண்டர்களின் நாவில் மு.க. ஸ்டாலின் தேன் தடவுகிறார் என்று அன்பழகன் எம். எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனுக்கு ஆதரவாக அன்பழகன் எம்.எல்.ஏ. பிரசாரம் செய்து வருகிறார். நேற்று பிரசாரத்தின் போது அவர் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளுடன் தொடர்புடையவர்களுடன் சேர்ந்துதான் காங்கிரசார் வாக்குசேகரித்து வருகின்றனர். அவர்களை ராஜீவ்காந்தியின் ஆன்மாகூட மன்னிக்காது. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை குறைகூறி கட்சி நடத்தினார். ஆனால் மு.க.ஸ்டாலின் இப்போது அ.தி.மு.க. தொண்டர்களின் நாவில் தேன் தடவுகிறார்.

புதுவையில் பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். மத்தியில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி இருந்தபோது மாநில அந்தஸ்துக்காக குரல் கொடுத்து இருப்பார்களா? புதுவையின் முதல்-அமைச்சராக தகுதிபெற்றவர் ரங்கசாமிதான். விபத்தில் முதல்-அமைச்சர் ஆனவர் நாராயணசாமி. இது புதுவைக்கு இருண்ட காலம்.

புதுவை மாநிலத்தில் திருட்டு லாட்டரி விற்பனைக்கு ஏஜெண்டு யார்? ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 400 கோடிக்கு இந்த திருட்டு லாட்டரி விற்பனை ஆகிறது. இப்போது அந்த கும்பல் ஆன்லைன் லாட்டரிக்கு சென்றுவிட்டது.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story