வருசநாடு பகுதியில் பலத்த மழை: பொதுமக்கள் நிதி வசூலித்து தூர்வாரிய பஞ்சந்தாங்கி கண்மாயில் தண்ணீர் தேங்கியது; விவசாயிகள் மகிழ்ச்சி


வருசநாடு பகுதியில் பலத்த மழை: பொதுமக்கள் நிதி வசூலித்து தூர்வாரிய பஞ்சந்தாங்கி கண்மாயில் தண்ணீர் தேங்கியது; விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 19 Oct 2019 10:45 PM GMT (Updated: 19 Oct 2019 6:38 PM GMT)

வருசநாடு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பொதுமக்கள் நிதி வசூலித்து தூர்வாரிய பஞ்சந்தாங்கி கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடமலைக்குண்டு,

வருசநாடு அருகே 64 ஏக்கர் நிலப்பரப்பில் பஞ்சந்தாங்கி கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயை சார்ந்து ஏராளமான ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை, முருங்கை உள்ளிட்ட விவசாயங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாததை தொடர்ந்து தனிநபர்கள் சிலர் கண்மாயின் பெருமளவு நிலப்பரப்பை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இதனால் மழை பெய்தாலும் கண்மாயில் நீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. மழை இல்லாத காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் பாதிப்படைந்தது. பொதுமக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் கண்மாய் தூர்வாரும் பணியை மேற்கொள்ளவில்லை. கடமலை-மயிலை ஒன்றியத்தில் வேறு சில கண்மாய்களில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் கண்மாய் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் பஞ்சந்தாங்கி கண்மாயில் மட்டும் தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை. இதனையடுத்து கடந்த மாதம் வருசநாடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி நிதி வசூல் செய்து ஆக்கிரமிப்பு இல்லாத பகுதியை மட்டும் தூர்வாரி கண்மாய் கரையை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இதில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து இருந்தன.

இந்தநிலையில் வருசநாடு பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக ஓடையில் நீர்வரத்து ஏற்பட்டு அந்த தண்ணீர் பஞ்சந்தாங்கி கண்மாயில் தேங்கியது. பல வருடங்களாக வறண்டு கிடந்த கண்மாயில் தற்போது தண்ணீர் தேங்கியதை தொடர்ந்து வருசநாடு பகுதி விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னை ஐகோர்ட்டில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டுவர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக தண்ணீர் தேக்க முடியும். அவ்வாறு தண்ணீர் தேக்கி வைத்தால் வறட்சியான நாட்களில் கூட வருசநாடு பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து காணப்படும். இதனால் வருசநாடு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி விவசாயம் செழிப்படையும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story