கேரள மாநில கால்நடைகள் தீவனத்துக்காக,வைக்கோல் கொள்முதல் செய்ய திருச்சி, தஞ்சை செல்லும் கம்பம் வியாபாரிகள்


கேரள மாநில கால்நடைகள் தீவனத்துக்காக,வைக்கோல் கொள்முதல் செய்ய திருச்சி, தஞ்சை செல்லும் கம்பம் வியாபாரிகள்
x
தினத்தந்தி 20 Oct 2019 10:15 PM GMT (Updated: 20 Oct 2019 2:57 PM GMT)

கேரள மாநில கால்நடைகளுக்கு தீவனம் அனுப்புவதற்காக கம்பத்தை சேர்ந்த வியாபாரிகள் திருச்சி, தஞ்சை மாவட்டங்களுக்கு சென்று வைக்கோல் கொள்முதல் செய்கின்றனர்.

கம்பம்,

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு அணை மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதன் மூலம் கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதியில் நெல், சோளம், கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த பயிர்கள் அறுவடை செய்யப்பட்ட பிறகு கிடைக்கக்கூடிய வைக்கோல், தட்டைகளை கால்நடைகளுக்காக வியாபாரிகள் சேகரம் செய்து உள்ளூர் மட்டுமின்றி கேரள மாநிலத்துக்கு லாரிகள் மூலம் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

கேரளாவில் ஏலக்காய், காபி, தேயிலை, மிளகு போன்ற பணப்பயிர்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் தட்பவெப்ப சூழ்நிலையின் காரணமாக சமதளப் பகுதியில் விளையக்கூடிய நெல், சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களில் மகசூல் கிடைக்காததால் அவற்றை சாகுபடி செய்ய கேரள விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் கேரளாவில் உள்ள கால்நடை வளர்ப்பவர்கள் தேனிமாவட்டம் கம்பம் பகுதி வியாபாரிகளிடம் இருந்து கால்நடை தீவனங்களை மொத்தமாக வாங்கி சேகரித்து வைத்து கொள்கின்றனர்.

இந்நிலையில் கம்பம் பகுதியில் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் முதல்போக சாகுபடி இந்த வருடம் காலதாமதமாக ஆகஸ்டு மாதம் தொடங்கியதால் வைக்கோலுக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது. இந்த தட்டுப்பாடு கேரளாவிலும் நிலவுகிறது. எனவே கம்பம் பகுதியில் உள்ள வைக்கோல் வியாபாரிகள் திருச்சி, தஞ்சை மாவட்ட பகுதிகளுக்கு சென்று வைக்கோல்களை கொள்முதல் செய்து கட்டுகளாக கட்டி லாரிகள் மூலம் ஏற்றி கம்பம் கொண்டு வருகின்றனர். பின்னர் அவற்றை கேரளமாநில வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர்.

இது குறித்து வைக்கோல் வியாபாரி ஒருவர் கூறுகையில், கேரளாவில் விவசாயிகள் பாலுக்காகவும், இறைச்சிக்காகவும் கால்நடை வளர்ப்பில்ஆர்வம் காட்டுகின்றனர். இந்த கால்நடைகளுக்கு வைக்கோல், தவிடு, சோளத்தட்டைகள் உள்ளிட்ட தீவனங்களை வழங்குகின்றனர். இதில் வைக்கோல்களை கால்நடைகள் விரும்பி உண்பதால் தமிழக வியாபாரிகளிடம் இருந்து மொத்தமாக வாங்கி சேமித்து வைத்துக்கொள்கின்றனர். இதற்காக கம்பத்தை சேர்ந்த வைக்கோல் வியாபாரிகள் திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் இருந்து வைக்கோல்களை கொள்முதல் செய்து லாரிகளில் ஏற்றி கேரளாவிற்கு விற்பனைக்கு கொண்டு செல்கிறோம் என்றார்.

Next Story