அழகியபாண்டியபுரம் அருகே, ஓடையில் ஸ்கூட்டர் பாய்ந்தது; பேராசிரியை சாவு


அழகியபாண்டியபுரம் அருகே, ஓடையில் ஸ்கூட்டர் பாய்ந்தது; பேராசிரியை சாவு
x
தினத்தந்தி 20 Oct 2019 10:00 PM GMT (Updated: 20 Oct 2019 8:37 PM GMT)

அழகியபாண்டியபுரம் அருகே சாலையோர ஓடையில் ஸ்கூட்டர் பாய்ந்து கல்லூரி பேராசிரியை பரிதாபமாக இறந்தார். இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பூதப்பாண்டி,

அழகியபாண்டியபுரம் அருகே பிளவக்கல்விளையைச் சேர்ந்தவர் சகாயஜெகன். இவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மைக்கிளின் சுமிதா(வயது 34). இவர்களுக்கு ஜெனோயின் அர்ஷத்(7) என்ற மகனும், அஸ்னா(3) என்ற மகளும் உள்ளனர்.

மைக்கிளின் சுமிதா தோமையார்புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இ்தற்காக அவர், தினமும் ஸ்கூட்டரில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.

இந்த நிைலயில் நேற்று முன்தினம் மாலையில் வகுப்புகள் முடிந்த பின்பு ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். போற்றியூர் அரசு பள்ளியின் அருகில் சென்றபோது திடீரென ஸ்கூட்டர் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள ஓடையில் பாய்ந்தது. இதில் மைக்கிளின் சுமிதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். விபத்து நடந்த பகுதி ஆள் நடமாட்டம் இல்லாததால் அவருக்கு உதவி செய்ய யாரும் உடனடியாக வரவில்லை.

பின்னர், நீண்ட நேரத்துக்கு பின் அந்த வழியாக வந்த சிலர் மைக்கிளின் சுமிதாவை மீட்டு பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மைக்கிளின் சுமிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மைக்கிளின் சுமிதாவின் கணவர் சகாய ஜெகன் விடுமுறையில் ஊருக்கு வந்து விட்டு கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் மீண்டும் வெளிநாடு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓடையில் ஸ்கூட்டர் பாய்ந்து பேராசிரியை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story