ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி - காய்கறி வியாபாரி கைது


ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி - காய்கறி வியாபாரி கைது
x
தினத்தந்தி 20 Oct 2019 9:45 PM GMT (Updated: 20 Oct 2019 8:37 PM GMT)

ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்த காய்கறி வியாபாரி கைது செய்யப்பட்டார்.

கோவை,

கோவை வைசியாள் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது60). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புலியகுளத்தில் உள்ள மோட்டார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில், நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த ஜெகநாதன்(43) என்பவரும் வேலை பார்த்தார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நட்பாக மாறியது.

இந்தநிலையில் ராஜேந்திரனிடம், ஜெகநாதன் தன்னுடைய மனைவி ரெயில்வே துறையில் வேலைபார்த்து வருவதாகவும், ரெயில்வே துறையில் வேலைக்கு ஆட்களை சேர்த்து விடுவதாகவும் கூறினார். இதனை நம்பி, ராஜேந்திரன் தன்னுடைய 2 மகள்கள், மருமகன், உறவினர் 7 பேர் உள்பட 10 பேருக்கு ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருமாறு கூறி தலா ரூ.2 லட்சம் வீதம் ஜெகநாதனிடம் ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து திருச்சியில் வேலை கிடைத்து இருப்பதாக கூறி ஜெகநாதன், ராஜேந்திரனிடம் போலி உத்தரவு கடிதத்தை கொடுத்துள்ளார். அதை எடுத்துக்கொண்டு 10 பேரும் திருச்சி சென்றனர். அங்கு சென்று விசாரித்தபோது அது போலி உத்தரவு கடிதம் என்று தெரியவந்தது.

இதுதொடர்பாக ராஜேந்திரன் கோவை ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாதுரை உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா, சப்-இன்ஸ்பெக்டர் சபரிராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஜெகநாதனை நேற்று கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில், மோசடி செய்த ஜெகநாதன் தற்போது ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டு நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே அச்சம்பட்டியில் வசித்து வருவதும், அங்கு காய்கறி கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. போலீசார் ஜெகநாதனிடம் இருந்து வேலை வாய்ப்புக்கான போலி உத்தரவு கடிதங்களை ஏராளமாக பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story