திருமணத்துக்கு ஏற்பாடு செய்யாததால் விரக்தி பெற்ற தாயை கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


திருமணத்துக்கு ஏற்பாடு செய்யாததால் விரக்தி பெற்ற தாயை கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 21 Oct 2019 10:15 PM GMT (Updated: 21 Oct 2019 7:50 PM GMT)

திருமணத்துக்கு ஏற்பாடு செய்யாத விரக்தியில், பெற்ற தாயை கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சென்னை,

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் அமர்நாத் (வயது 40), கார் டிரைவர். இவர் தனது தாயார் சசிகலாவுடன் வசித்து வந்தார். குடிப்பழக்கம் உள்ள இவர், அடிக்கடி பணம் கேட்டு தனது தாயாரை தொந்தரவு செய்துள்ளார்.

மேலும், தனக்கு திருமணம் செய்து வைக்கும்படியும் கூறி வந்துள்ளார். ஆனால் சசிகலா, திருமணத்துக்கு ஏற்பாடு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதனால், அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 1-ந் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது, “நீ செத்து ஒழிந்தால் தான் எனக்கு திருமணம் நடக்கும்” என்று கூறி அமர்நாத் தனது தாயாரை கத்தியால் குத்தினார். பின்னர், சசிகலா மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில், சசிகலா இறந்து போனார். இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமர்நாத்தை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஸ்ரீலேகா ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, அமர்நாத் மீது சந்தேகத்துக்கு இடமின்றி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story