வீட்டில் இருந்து பணிக்கு புறப்பட்டபோது பெண் போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து சாவு


வீட்டில் இருந்து பணிக்கு புறப்பட்டபோது பெண் போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 22 Oct 2019 11:15 PM GMT (Updated: 22 Oct 2019 6:36 PM GMT)

கோவையில் வீட்டில் இருந்து பணிக்கு புறப்பட்டபோது மயங்கி விழுந்து பெண் போலீஸ் ஏட்டு பரிதாபமாக இறந்தார்.

கோவை,

கோவை செட்டிபாளையத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 38). இவருடைய மனைவி ஸ்மைல் (36). இவர் கோவை மாநகர ஆயுதப்படையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

ஸ்மைல் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கோவையில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று காலையில் பணிக்கு செல்வதற்காக புறப்பட்டார். வீட்டில் இருந்து வெளியே வந்தபோது திடீரென்று ஸ்மைல், மயங்கி கீழே விழுந்தார்.

உடனே அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். திடீரென்று வலிப்பு ஏற்பட்டதால் ஸ்மைல் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story