கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேருக்கு ரூ.6 லட்சத்தில் புதிய வடங்கள்


கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேருக்கு ரூ.6 லட்சத்தில் புதிய வடங்கள்
x
தினத்தந்தி 23 Oct 2019 10:45 PM GMT (Updated: 23 Oct 2019 7:07 PM GMT)

சாரங்கபாணி கோவில் தேருக்கு ரூ.6 லட்சத்தில் புதிய வடங்கள் தயாரிக்கப்பட்டு நேற்று கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாரங்கபாணி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் சாரங்கபாணி எனும் ஆராவமுதன் கோமளவல்லி தாயார் மற்றும் மகாலட்சுமியுடன் அருள்பாலித்து வருகிறார். தாயாரை மணந்து கொள்ள இத்தலத்துக்கு பெருமாள் தேரில் வந்ததாக தலவரலாறு கூறுகிறது. எனவே பெருமாள் சன்னதி தேர் வடிவில் அமைந்திருப்பது இக்கோவிலின் சிறப்பம்சம் ஆகும்.

பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். விழாவில் தமிழகத்தின் பல்வேறு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுப்பார்கள். தமிழகத்தில் 3-வது பெரிய தேர் என்ற சிறப்பு, இந்த கோவிலுக்கு சொந்தமான தேருக்கு உண்டு. இந்த தேருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் புதிய வடங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

ரூ.6 லட்சம் செலவில்...

அதன்படி ரூ.6 லட்சம் செலவில் 100 மீட்டர் நீளம் கொண்ட 2 வடங்கள், 175 அடி நீளம் கொண்ட 2 வடங்கள் என மொத்தம் 4 பிரமாண்ட வடங்கள் தயாரிக்கப்பட்டன. புதிய வடங்கள் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள கயிறு உற்பத்தியாளர்கள் மூலம் தயாரிக்கப்பட்டன.

7½ டன் தென்னை நார் கொண்டு வடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. புதிய வடங்கள் நேற்று கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. அப்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆசைத்தம்பி, கோவிந்தராஜன் மற்றும் பொதுமக்கள் புதிய வடங்களை பார்வையிட்டனர். அடுத்த ஆண்டு (2020) நடைபெற உள்ள சித்திரை தேர் திருவிழாவில் இந்த வடங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story