சிறையில் வார்டரை தாக்கிய வழக்கு: திருச்சி கோர்ட்டில் 3 கைதிகள் ஆஜர்


சிறையில் வார்டரை தாக்கிய வழக்கு: திருச்சி கோர்ட்டில் 3 கைதிகள் ஆஜர்
x
தினத்தந்தி 23 Oct 2019 10:15 PM GMT (Updated: 23 Oct 2019 8:08 PM GMT)

திருச்சி சிறையில் வார்டரை தாக்கிய வழக்கில் திருச்சி கோர்ட்டில் 3 கைதிகள் ஆஜராகினர்.

திருச்சி,

திருச்சி மத்திய சிறையில் பிளாக் எண் 6-ல் அடைக்கப்பட்டு இருந்த தண்டனை கைதிகள் மதன்குமார், ஸ்ரீதரன். இவர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு பிளாக்கிற்கு மாற்றுவதற்காக வார்டர்கள் புண்ணியமூர்த்தி, திருமுருகானந்தம் ஆகியோர் அழைத்து சென்றனர். அப்போது அதே பிளாக்கில் அடைக்கப்பட்டு இருந்த மற்ற தண்டனை கைதிகளான மதுரையை சேர்ந்த கார்த்திக்(32), முனியசாமி(29), காரைக்குடியை சேர்ந்த திருச்செல்வம்(37) ஆகியோர் கைதிகளை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் கைதிகள் 3 பேரும் வார்டர் புண்ணியமூர்த்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கே.கே.நகர் போலீசார் கைதிகள் கார்த்திக், முனியசாமி, திருச்செல்வம் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், வார்டர்களை தாக்கியதால் 3 கைதிகளுக்கும் சிறையில் டீ, காபி வழங்குவது நிறுத்தப்பட்டது. 100 நாட்களுக்கு உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பும் மறுக்கப்பட்டது.

3 கைதிகள் கோர்ட்டில் ஆஜர்

இதற்கிடையே வார்டர் புண்ணியமூர்த்தியுடன் ஏற்பட்ட மோதலில் கைதிகள் முனியசாமி, கார்த்திக் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவர்களுக்கு சிறை மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்கவில்லை எனவும் கைதிகளின் சார்பில் வக்கீல் திவாகர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கைதிகளை தாக்கிய வார்டர்கள் மீதும், கைதிகளுக்கு சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2-ல் நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக 3 கைதிகளும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கைதிகள் 3 பேரும் தனித்தனியாக மாஜிஸ்திரேட்டுவிடம் மனு அளித்தனர். அப்போது விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு திரிவேணி, கைதிகளை தாக்கிய சிறை வார்டர்கள் 2 பேர் மற்றும் சிகிச்சை அளிக்காத மருத்துவர்களிடம் விசாரணை நடத்தும்படி கே.கே.நகர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Next Story