திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, பழனிக்கு 3 புதிய குளிர்சாதன பஸ்கள்


திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, பழனிக்கு 3 புதிய குளிர்சாதன பஸ்கள்
x
தினத்தந்தி 24 Oct 2019 11:00 PM GMT (Updated: 24 Oct 2019 3:09 PM GMT)

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, பழனிக்கு 3 புதிய குளிர்சாதன பஸ்களை அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

திருச்சி,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டலம் கும்பகோணம் கோட்டம் சார்பில் 3 புதிய குளிர்சாதன பஸ்கள் நேற்று முதல் இயங்க தொடங்கின. இதற்கான விழா திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு, திருச்சியில் இருந்து கரூர் வழியாக கோவைக்கு 2 குளிர்சாதன பஸ்களையும், திருச்சியில் இருந்து திண்டுக்கல் வழியாக பழனிக்கு ஒரு குளிர்சாதன பஸ்சையும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அதன்படி, திருச்சி புறநகர் கிளை சார்பில் திருச்சியில் இருந்து கரூர் வழியாக கோயம்புத்தூர் வரை 2 பஸ்களும் (தடம் எண்:533 இ, 533 எப்), திருச்சி கண்டோன்மெண்ட் கிளை சார்பில் திருச்சியில் இருந்து திண்டுக்கல் வழியாக ஒரு பஸ் (தடம் எண்:564 டி) பழனி வரை இயக்கப்படுகிறது. குளிர்சாதன பஸ்களின் கட்டண விவரம் வருமாறு:-

திருச்சியில் இருந்து கோவை செல்லும் குளிர்சாதன பஸ்சுக்கு திருச்சி முதல் குளித்தலை வரை ரூ.45-ம், திருச்சியில் இருந்து கரூர் வரை ரூ.90-ம், காங்கேயம் வரை ரூ.155-ம், பல்லடம் வரை ரூ.190-ம், கோயம்புத்தூர் (சிங்காநல்லூர்) வரை ரூ.225-ம், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து பழனி வரை செல்லும் குளிர்சாதன பஸ்சுக்கு திருச்சி முதல் மணப்பாறை வரை ரூ.45-ம், திண்டுக்கல் வரை ரூ.115-ம், ஒட்டன்சத்திரம் வரை ரூ.145-ம், பழனி வரை ரூ.175-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி அதிக அளவில் அரசு பஸ்கள் பொதுமக்களின் வசதிக்காக இயக்கப்படுகிறது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட தனியார் பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என அரசு எச்சரித்துள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ராஜ்மோகன் மற்றும் அரசு போக்குவரத்துக்கழக அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story