ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் தடை நீடிப்பு


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் தடை நீடிப்பு
x
தினத்தந்தி 24 Oct 2019 11:15 PM GMT (Updated: 24 Oct 2019 6:54 PM GMT)

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

பென்னாகரம்,

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

50 ஆயிரம் கனஅடி

நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று முன்தினம் இரவு முதல் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 10 மணிக்கு ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து மாலை 4 மணிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்குமேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

தடை நீடிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்தது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்தனர். நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை, மாமரத்து கடவு பரிசல்துறை, கொத்திகல் பரிசல்துறை, முதலைப்பண்ணை, ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையை பூட்டி போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் கரையோரம், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.


Next Story