நீர்வரத்து வினாடிக்கு 47 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 120.20 அடியாக உயர்ந்தது


நீர்வரத்து வினாடிக்கு 47 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 120.20 அடியாக உயர்ந்தது
x
தினத்தந்தி 24 Oct 2019 11:15 PM GMT (Updated: 24 Oct 2019 8:32 PM GMT)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 47 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், அணை நீர்மட்டம் 120.20 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுவதால் வெள்ள அபாயம் நீடிக்கிறது.

மேட்டூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக மேட்டூர் அணை திகழ்கிறது. இந்த ஆண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நேற்று முன்தினம் நிரம்பியது.

இதையடுத்து அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு மற்றும் நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு அணைக்கு வரத்து நீரான வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி நீர் அப்படியே திறந்து விடப்பட்டது.

அதே நேரத்தில் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதன் எதிரொலியாக, ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து கணிசமாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணைக்கும் நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 47 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

வெள்ள அபாயம் நீடிக்கிறது

அணையில் இருந்து வினாடிக்கு 45 ஆயிரத்து 350 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதில் மேட்டூர் கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 350 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. மீதமுள்ள 45 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் செல்கிறது. இதில் நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடி நீரும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது.

காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை உள்பட 12 மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கிறது. இதையொட்டி காவிரி கரையோரங்களில் வருவாய்த்துறையினர் தண்டோரா போட்டு அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். போலீசாரும் கரையோர பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர்.

Next Story