சூளகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சூளகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Oct 2019 10:45 PM GMT (Updated: 25 Oct 2019 8:47 PM GMT)

சூளகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர், 

சூளகிரியில், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளின் விரோத போக்கை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

மாவட்ட நிர்வாகிகள் நரசிம்மமூர்த்தி, கிரிஜம்மா, யசோதா, சூளகிரி ஒன்றிய தலைவர்கள் வெங்கடேஷ், சம்பங்கிராமையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட இளைஞரணி தலைவர் சேட்டு வரவேற்றார். இதில் மாவட்ட தலைவர் ஸ்ரீராமரெட்டி கலந்து கொண்டு கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, சூளகிரி பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் விட்டு, விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். சூளகிரி தாலுகாவில் உள்ள அனைத்து விவசாய கிராமங்களிலும், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யும் நிலங்களுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

மலைத்தோட்ட விவசாயிகளுக்கு பட்டா மற்றும் கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். வன விலங்குகளால் உண்டாகும் பயிர் சேதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். யானைகளால் உயிரிழந்த விவசாயிகளுக்கு கர்நாடக அரசை போன்று ரூ. 10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Next Story