வேப்பந்தட்டை பகுதியில் பருவ மழை பொய்த்ததால் விவசாயிகள் வேதனை


வேப்பந்தட்டை பகுதியில் பருவ மழை பொய்த்ததால் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 28 Oct 2019 11:00 PM GMT (Updated: 28 Oct 2019 3:46 PM GMT)

வேப்பந்தட்டை பகுதியில் பருவ மழை பொய்த்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் பெரும்பாலானோர் விவசாய தொழில் செய்து வருகிறார்கள். இதில் பலர் கிணற்றுப்பாசனத்தை பயன்படுத்தியும், மேலும் பலர் மழையை நம்பியும் அதாவது மானாவாரி நிலத்தில் பயிர் செய்தும் வருகிறார்கள். இந்த ஆண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புயல் மழை மற்றும் பருவமழை பெய்தபோதெல்லாம் வேப்பந்தட்டை பகுதியில் போதிய மழை பெய்யாமல் லேசான மழை மட்டுமே பெய்தது.

அதாவது மானாவாரி பயிருக்கு ஏற்ற வகையில் லேசான அளவே மழை பெய்து உள்ளது. கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் பெரும்பாலான ஊர்களில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் வேதனை

தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பருவ மழை பெய்து பெரும்பாலான அணைகள், ஏரிகள் மற்றும் குளங்கள் நீர் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் வேப்பந்தட்டை பகுதி உள்பட பெரம்பலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் போதிய பருவ மழை பெய்யாததால் ஒரு சில ஏரி, குளங்கள் கூட நீர் நிறையாமல் வறண்டு காணப்படுகிறது.

இதனால் இப்பகுதியில் உள்ள கிணறுகளிலும், ஆழ்துளைக் கிணறுகளிலும் நீர்மட்டம் உயராமல் உள்ளது. கடந்த வாரம் பெய்த லேசான மழையை நம்பி பாசன விவசாயிகள் பலர் நெல் பயிரிட்டு உள்ளனர். ஆனால் தொடர்ந்து மழை பெய்யவில்லையென்றால், பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.


Next Story