ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலை பிள்ளைப்பாக்கம் பகுதியில் விபத்துகளை தடுக்க எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் - வாகன ஓட்டிகள் கோரிக்கை


ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலை பிள்ளைப்பாக்கம் பகுதியில் விபத்துகளை தடுக்க எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும்  - வாகன ஓட்டிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 Oct 2019 10:15 PM GMT (Updated: 28 Oct 2019 6:49 PM GMT)

ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலை பிள்ளைப்பாக்கம் பகுதியில் விபத்துகளை தடுக்க எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதி ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலையில் அமைந்துள்ளது. வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால் காலை மற்றும் மாலை வேளைகளில் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் இருந்து கச்சிப்பட்டு பகுதி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டு அருகில் இருந்து பிள்ளைப்பாக்கம் கூட்டுச்சாலை வரை 3½ கிலோமீட்டர் தொலைவுக்கு இரண்டு வழிச்சாலை நான்கு வழிச்சாலையாக கடந்த ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பிள்ளைப்பாக்கம் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலையில் நான்கு வழிச்சாலையில் இருந்து இரண்டு வழிச்சாலையாக மாறும் கூட்டு சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படவில்லை.

இதனால் இரவு நேரங்களில் நான்கு வழிச்சாலை என நினைத்து வேகமாக வரும் வாகன ஓட்டிகள் திடீரென இரண்டு வழிச்சாலையாக மாறும் இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகளில் சிக்கி விடுகின்றனர்.

குறிப்பிட்ட அந்த இடத்தில் வாகன ஓட்டிகள் தொடர்ந்து விபத்துகளில் சிக்குவதும், அதில் பெரும்பாலானோர் உயிரிழப்பதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. எனவே இந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story