சித்தராமையா வாய்க்கு வந்ததை பேசுவது சரியல்ல முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி


சித்தராமையா வாய்க்கு வந்ததை பேசுவது சரியல்ல முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 28 Oct 2019 11:30 PM GMT (Updated: 28 Oct 2019 8:22 PM GMT)

சித்தராமையா வாய்க்கு வந்ததை பேசுவது சரியல்ல என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு,

முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா நேற்று முன்தினம், எடியூரப்பாவுக்கு ஆதரவாக லிங்காயத் சமுதாயம் இல்லை என்றும், குமாரசாமிக்கு ஆதரவாக ஒக்கலிக சமுதாயம் இல்லை என்றும் தனது ஆதரவாளர்களுடன் பேசிய வீடியோ ஒன்று வெளியானது.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

சமீப காலமாக சித்தராமையா தனக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார். அவர் என்ன பேசுகிறார் என்று, அவருக்கே தெரியவில்லை. சித்தராமையா பேசுவது, அவரது கட்சிக்குள்ளேயே பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. கட்சிக்குள் பிரச்சினை ஏற்படும் விதமாகவே சித்தராமையா பேசி வருகிறார். தனக்கே அனைத்து அதிகாரமும் இருப்பது போன்று, ஒரு சர்வாதிகாரி போல பேசுகிறார். சித்தராமையா தனது வாய்க்கு வந்ததை பேசுவது சரியல்ல.

எதிர்க்கட்சி தலைவராக இருந்து சரியான முறையில் பேச வேண்டும். மக்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்பதை சித்தராமையா புரிந்துகொள்ள வேண்டும். சித்தராமையாவின் பேச்சை நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

எனது தலைமையிலான பா.ஜனதா அரசு கவிழ்வதற்கு விடமாட்டேன் என்று குமாரசாமி கூறி இருக்கிறார். இதற்காக குமாரசாமிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த அரசு சிறப்பான முறையில் செயல்படும் என்று குமாரசாமி நம்புகிறார். மாநிலத்தில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதில் இந்த அரசு சரியாக செயல்படுகிறது.

அதனால் பா.ஜனதாவை தொந்தரவு செய்ய கூடாது என்று குமாரசாமி நினைத்திருக்கலாம். அரசுக்கு ஆதரவாகவும் அவர் பேசி இருக்கலாம். குமாரசாமியின் பேச்சை வரவேற்கிறேன். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story