புவனகிரியில், மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்; புதுமாப்பிள்ளை பலி - திருமணமான 3 மாதத்தில் பரிதாபம்


புவனகிரியில், மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்; புதுமாப்பிள்ளை பலி - திருமணமான 3 மாதத்தில் பரிதாபம்
x
தினத்தந்தி 29 Oct 2019 10:15 PM GMT (Updated: 29 Oct 2019 7:28 PM GMT)

புவனகிரியில் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார். திருமணமான 3 மாதத்தில் நடந்த இந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

புவனகிரி,

புவனகிரி அருகே உள்ள பூதவராயன்பேட்டையை சேர்ந்தவர் சின்னராசு (வயது 31). இவருடைய மனைவி தீபா (22). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் சொந்தவேலை காரணமாக சின்னராசு புவனகிரிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

புவனகிரி அய்யனார் கோவில் அருகே சென்றபோது முன்னால் சென்ற டிராக்டரை அவர் முந்திச்செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சின்னராசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி அறிந்த தீபா மற்றும் உறவினர்கள் பதறியடித்துக் கொண்டு வந்து சின்னராசுவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையே விபத்து குறித்த தகவலின் பேரில் புவனகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சின்னராசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story