குருப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள்


குருப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள்
x
தினத்தந்தி 29 Oct 2019 10:30 PM GMT (Updated: 29 Oct 2019 8:52 PM GMT)

குருப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றது.

குளித்தலை,

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்ததை தொடர்ந்து, குளித்தலையில் உள்ள பிரசித்தி பெற்ற கடம்பவனேசுவரர் கோவிலில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. அதன்பின்னர் குரு பகவானுக்கு (தட்சிணா மூர்த்தி) பால், பன்னீர், தேன், எண்ணெய், திரவிய பொடிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், குளித்தலை மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். அதேபோல குளித்தலை பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களிலும் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

குருப்பெயர்ச்சியையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் குருப் பெயர்ச்சி விழா நடந்தது. இதனையொட்டி கோவிலில் உள்ள நவக்கிரக சன்னதியில் குரு பகவானுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் சொல்லி சிறப்பு பூஜைகள் செய்தனர். கொண்டை கடலை மாலை மற்றும் பூக்களால் குருபகவான் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் நவக்கிரகங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கரூர், திருமாநிலையூர், பசுபதிபாளையம், செங்குந்தபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கரூரில் உள்ள பல்வேறு கோவில்களிலும் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.


Next Story