முல்லைப்பெரியாற்றில் இழுத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உடல் மீட்பு


முல்லைப்பெரியாற்றில் இழுத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உடல் மீட்பு
x
தினத்தந்தி 29 Oct 2019 11:00 PM GMT (Updated: 29 Oct 2019 11:19 PM GMT)

முல்லைப்பெரியாற்றில் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உடலை நேற்று மீட்டனர்.

கம்பம்,

கம்பம்மெட்டு காலனியை சேர்ந்தவர் அஸ்கர்அலி. அவருடைய மகன் முகமது யூனுஸ் (வயது 20). கல்லூரி மாணவரான இவர், தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் மாலை அவர், அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள், சிலருடன் சேர்ந்து சுருளிப்பட்டி தொட்டமன்துறை பகுதியில் முல்லைப்பெரியாற்றில் குளித்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவர் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். அவருடைய நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்றதாலும், இரவு நேரமானதாலும் தேடும் பணி நிறுத்தப்பட்டது. அவரை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாணவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் ஆற்றில் நீர்வரத்து குறைந்தது. பின்பு நேற்று காலை மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் மணிகண்டன் தலைமையில் 30 தீயணைப்பு படையினர் கொண்ட 5 குழுக்களும், துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) அமீர் அகமது தலைமையில் போலீசார் மற்றும் கிராம மக்கள் இணைந்து சுருளிப்பட்டியில் இருந்து வீரபாண்டி வரை முல்லைப்பெரியாற்றில் மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

காமயகவுண்டன்பட்டி-நாராயணத்தேவன்பட்டிக்கு இடையே உள்ள பகுதியில் முகமது யூனுஸ் உடலை மீட்டனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவருடைய உடலை கம்பம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story