திருவாரூரில், 3-வது நாளாக மழை மாணவர்கள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்


திருவாரூரில், 3-வது நாளாக மழை மாணவர்கள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்
x
தினத்தந்தி 30 Oct 2019 11:00 PM GMT (Updated: 30 Oct 2019 5:13 PM GMT)

திருவாரூரில் நேற்று 3-வது நாளாக மழை பெய்தது. மழையினால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாயினர்.

திருவாரூர்,

இலங்கையை ஒட்டிய வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை சற்று வலுப்பெற்றது.

இதனால் தென் மற்றும் வட மாவட்டங்களில் மழை பெய்யும். குறிப்பாக டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

பரவலாக மழை

அதன்படி திருவாரூரில் நேற்று 3-வது நாளாக பரவலாக மழை பெய்தது. மழையினால் அனைத்து சாலைகளில் தண்ணீர் வெள்ள பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக திருவாரூர் கமலாலயம் வடகரை சிமெண்டு சாலையில் மழைநீர் வடிய வாய்ப்பு இல்லாமல் தேங்கி நிற்கிறது. காலை, மாலை இருவேளைகளிலும் பெய்த மழையினால் பள்ளி மாணவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். வேலைக்கு செல்பவர்கள் சிரமடைந்தனர். மழையினால் அனைத்து தரப்பினரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

திருவாரூர்-18, நன்னிலம்-18, குடவாசல்-14, நீடாமங்கலம்-3, முத்துப்பேட்டை-3, வலங்கைமான்-2, திருத்துறைப்பூண்டி-2, பாண்டவையாறு தலைப்பு-2, மன்னார்குடி-1 என மாவட்ட முழுவதும் சராசரியாக 7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

இதில் அதிகபட்சமாக திருவாரூர், நன்னிலம் பகுதிகளில் 18 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. 

Next Story