6-வது நாளாக வேலைநிறுத்தம் அரசு டாக்டர்களுடன் இணைந்து மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


6-வது நாளாக வேலைநிறுத்தம் அரசு டாக்டர்களுடன் இணைந்து மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Oct 2019 10:15 PM GMT (Updated: 30 Oct 2019 5:17 PM GMT)

திருவண்ணாமலையில் அரசு டாக்டர்களின் வேலைநிறுத்தம் 6-வது நாளாக நீடித்தது. இந்த நிலையில் டாக்டர்களுக்கு ஆதரவாக அவர்களுடன் இணைந்து மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 25-ந் தேதி முதல் அரசு டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6-வது நாளாக நேற்றும் டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது. அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் விதமாக டாக்டர்களுடன் மருத்துவ மாணவர்களும், பயிற்சி டாக்டர்களும் கைகோர்த்தனர்.

அவர்கள் மருத்துவமனையில் டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர்கள் சோஜி, பாலசுப்பிரமணியன், செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

டாக்டர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் புறநோயாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவசர சிகிச்சை, மகப்பேறு சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக இன்று (வியாழக்கிழமை) முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

Next Story