வடகாடு மலைப்பகுதியில், பஸ்சுக்குள் குடை பிடித்து செல்லும் பயணிகள்


வடகாடு மலைப்பகுதியில், பஸ்சுக்குள் குடை பிடித்து செல்லும் பயணிகள்
x
தினத்தந்தி 30 Oct 2019 10:45 PM GMT (Updated: 30 Oct 2019 5:37 PM GMT)

வடகாடு மலைக்கிராமங்கள் வழியே இயக்கப்படும் பஸ்கள் ஓட்டை உடைசல் காரணமாக, அதில் பயணம் செய்யும் மக்கள் குடைபிடித்து செல்கின்றனர்.

சத்திரப்பட்டி, 

ஒட்டன்சத்திரத்தில் இருந்து வடகாடு மலைக்கிராமங் களான வடகாடு, வண்டிப்பாதை, பால்கடை, பெத்தேல்புரம் வழியாக பாச்சலூர், கே.சி.பட்டி, பெரியகுளம், வத்தலக்குண்டு, கொடைக் கானல் ஆகிய ஊர்களுக்கு தினமும் ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழியாக இயக்கப்படும் பஸ்கள் பெரும்பாலும் ஓட்டை உடைசலாகவும், போக்குவரத்துக்கு லாயக்கற்றதாகவும் உள்ளது.

குறிப்பாக பல பஸ்களின் மேற்கூரை பலத்த சேதம் அடைந்துள்ளது. இதனால் மழை காலத்தில் பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக குடைபிடித்து செல்கின்றனர்.

இந்த அவல நிலை குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மலைப்பாதையில் இயக்கப்பட கூடிய பஸ்கள் அதிக திறன் கொண்டதும், தரமானதுமாக இருந்தால் மட்டுமே விபத்து ஏற்படுவதை தடுக்க முடியும். ஆனால் வடகாடு பகுதியில் இயக்கக்கூடிய பஸ்கள் ஓட்டை உடைசல் காரணமாக மழைக்காலத்தில் மக்கள் குடைபிடித்து செல்கின்றனர்.

எனவே வடகாடு மலைப்பாதையில் தரமான பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story