சிவகாசியில் கிணற்றில் பிணமாக கிடந்தவர் புதுமாப்பிள்ளை: கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் புகார்


சிவகாசியில் கிணற்றில் பிணமாக கிடந்தவர் புதுமாப்பிள்ளை: கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் புகார்
x
தினத்தந்தி 30 Oct 2019 10:15 PM GMT (Updated: 30 Oct 2019 6:40 PM GMT)

சிவகாசியில் கிணற்றில் பிணமாக மிதந்தவர் அடையாளம் தெரிய வந்துள்ளது. புதுமாப்பிள்ளையான அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டு இருக்கலாம் என்று உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சிவகாசி,

சிவகாசி விஸ்வநத்தம் பகுதியில் குருசாமி என்பவருக்கு சொந்தமான தோட்ட கிணற்றில் சிதைந்த நிலையில் வாலிபர் உடல் மிதந்தது. இதுகுறித்து டவுன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பிணமாக கிடந்தவர் அணிந்து இருந்த சட்டையை வைத்து நடத்திய விசாரணையில் அவர் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பள்ளப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த துரைராஜ் என்பவரது மகன் ராஜா (வயது 29) என தெரியவந்தது. தீவிர விசாரணையில் மேலும் பல தகவல்கள் கிடைத்தன.

பட்டாசு தொழிலாளியான ராஜா கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனார். இது குறித்து அவரது தாயார் காளஸ்வரி சிவகாசி கிழக்கு போலீசில் கடந்த ஆகஸ்டு மாதம் புகார் செய்துள்ளார். போலீசார் அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பள்ளப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த துரைராஜ், காளஸ்வரி தம்பதிக்கு 10 குழந்தைகள் இதில் 3 பெண்கள் 7 ஆண்கள். கிணற்றில் பிணமாக கிடந்த ராஜா 8-வது குழந்தையாவார். துரைராஜ் மற்றும் அவரது மனைவி காளஸ்வரி இருவரும் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ளனர். ராஜாவும் சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.

கடந்த 5.6.2019 அன்று தனது அக்காள் மகள் கல்பனாவை, பெற்றோர் சம்மதத்துடன் ராஜா திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த 2 மாதத்தில் ராஜா காணாமல் போனார். தற்போது அவர் பிணமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். ராஜாவை கொலை செய்து உடலை கிணற்றில் வீசியுள்ளனர் என்று அவரது உறவினர்கள் சிவகாசி டவுன் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story