காதலியுடன் பேசிக்கொண்டிருந்தபோது போதையில் வந்த 2 பேர் தகராறு: தாக்குதலுக்கு பயந்து கொள்ளிடம் ஆற்றில் குதித்த என்ஜினீயரிங் மாணவர்


காதலியுடன் பேசிக்கொண்டிருந்தபோது போதையில் வந்த 2 பேர் தகராறு: தாக்குதலுக்கு பயந்து கொள்ளிடம் ஆற்றில் குதித்த என்ஜினீயரிங் மாணவர்
x
தினத்தந்தி 30 Oct 2019 10:45 PM GMT (Updated: 30 Oct 2019 8:57 PM GMT)

காதலியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, மதுபோதையில் வந்த 2 பேர் தகராறில் ஈடுபட்டு தாக்கியதால், பயந்துபோன என்ஜினீயரிங் மாணவர் கொள்ளிடம் ஆற்றில் குதித்தார். அவரது கதி என்ன என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொள்ளிடம் டோல்கேட்,

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஜூவித் (வயது 22). இவர் திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரியில் 3-வது ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி படித்த அவர் துறையூரில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு அவ்வப்போது சென்று வருவார். அப்போது, அவருக்கும் புலிவலம் பகுதியை சேர்ந்த உறவினர் பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டது. அந்த பெண் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் எம்.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார்.

நேற்று ஜூவித் தனது காதலியுடன் நெ.1 டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றுப்பாலத்திற்கு கீழ் பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மழை பெய்ய ஆரம்பித்ததால் இருவரும் பாலத்தின் அடியில் உள்ள தூணில் மறைவாக நின்றுகொண்டிருந்தனர்.

ஆற்றில் குதித்தார்

இதனை தூரத்தில் அமர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்த வாலிபர்கள் 2 பேர் கவனித்தனர். பின்னர் அவர்கள் அருகில் வந்து, நீங்கள் யார்? இங்கு என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அந்த வாலிபர்கள் ஜூவித்தை கடுமையாக தாக்கினர். இதனால் தன்னுடன் வந்த காதலிக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ? என்று பயந்துபோன ஜூவித் தனது காதலியை இங்கிருந்து போய்விடு நான் வந்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த பெண் அங்கிருந்து பயத்தில் நெ.1 டோல்கேட்டை நோக்கி ஓடிவந்தார். அப்போது அங்கிருந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் அந்த பெண்ணிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள் ஜூவித்திடம் தகராறில் ஈடுபடுபவர்களை தட்டி கேட்பதற்காக அங்கு சென்றனர். இதற்கிடையில் வாலிபர்களின் தாக்குதலுக்கு பயந்த ஜூவித், கொள்ளிடம் ஆற்று தண்ணீரில் குதித்தார். அவர் கைகளை அசைத்தபடி நீரில் மூழ்கினார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ஜூவித்திடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

தேடும் பணி

பின்னர், இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலா மற்றும் போலீசார், அந்த வாலிபர்களை பிடித்ததுடன், அந்த பெண்ணையும் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர். இதனையடுத்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அதிகாரி ஆரோக்கியசாமி தலைமையில் மீட்புபணி குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரப்பர் படகு மூலம் ஜூவித்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆனதால் தேடுதல் பணி கைவிடப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) மீண்டும் தேடுதல் பணி நடைபெறும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பிடிபட்ட வாலிபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி மாங்காடு பகுதியை சேர்ந்த சேகர் மகன் கோகுல் (23), மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தேவிமங்கலம் பகுதியை சேர்ந்த ராமர் மகன் கலையரசன் (22) என தெரியவந்தது. அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story