திருவாரூரில் 4 நாட்களாக தொடர் மழை: 100 ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது


திருவாரூரில் 4 நாட்களாக தொடர் மழை: 100 ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது
x
தினத்தந்தி 31 Oct 2019 11:00 PM GMT (Updated: 31 Oct 2019 6:41 PM GMT)

திருவாரூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக 100 ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி உள்ளது. வாய்க்கால்களை தூர்வாராததே பயிர்கள் மழைநீரில் மூழ்கியதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

திருவாரூர்,

தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்படுவதும், வடகிழக்கு பருவமழை காரணமாக சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாவதும் தொடர்ந்து பல ஆண்டு களாக நீடித்து வருகிறது.

ஆறுகள், ஏரிகள், பாசன வாய்க்கால்களை கோடை காலத்திலேயே தூர்வாரி முடிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. ஆனால் தூர்வாரும் பணிகள் மிகவும் தாமதமாக நடப்பதால் விவசாய பணிகளை சிரமத்துடன் மேற்கொள்ள வேண்டி இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

100 ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி பயிர்களுக்கு உரமிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவாரூர் அருகே உள்ள கட்டளை அன்னவாசல், கல்யாணமகாதேவி, அனக்குடி, கொட்டாரக்குடி ஆகிய பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது. இந்த பகுதியில் மழைநீர் கல்யாணமகாதேவி வடிகால் வாய்க்கால் வழியாக அருகே உள்ள காட்டாற்றில் கலக்க வேண்டும்.

ஆனால் கல்யாணமகாதேவி வடிகால் வாய்க்காலை தூர்வாராத காரணத்தால் மழைநீர் வடிந்து செல்லாமல் வயல்களில் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கி உள்ளது. கட்டளை அன்னவாசல் கிராமத்தில் மட்டும் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களில் நெற்பயிர் மழை நீரில் மூழ்கி உள்ளது.

அழுகும் அபாயம்

இந்த நெற்பயிர்கள் அனைத்தும் 2 மாதங்கள் வயதுடைய 1009 நெல் ரகம் ஆகும். வாய்க்கால்களை தூர்வாராததே நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்க காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இதே நிலை நீடித்தால் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

திருவாரூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறு, வாய்க்கால் ஆகியவற்றில் தண்ணீர் அதிகமாக செல்கிறது. திருவாரூர் அருகே உள்ள காட்டாற்றிலும் அதிக தண்ணீர் செல்கிறது. இதனால் கல்யாணமகாதேவி வாய்க்காலில் இருந்து காட்டாற்றுக்கு தண்ணீர் செல்வதில் சிரமம் உள்ளது. எனவே கல்யாணமகாதேவி வாய்க்காலில் தண்ணீரை வடிய வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூர்வார வேண்டும்

மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதால் சம்பா வயல்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு ஆறு, வாய்க்கால், வடிகால்களை முறையாக தூர்வார வேண்டும். அனைத்து பகுதிகளிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர். 

Next Story