பேராவூரணி நீலகண்டபுரம் ரெயில்வே கீழ்பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


பேராவூரணி நீலகண்டபுரம் ரெயில்வே கீழ்பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 31 Oct 2019 10:30 PM GMT (Updated: 31 Oct 2019 7:07 PM GMT)

பேராவூரணி நீலகண்டபுரம் ரெயில்வே கீழ்பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேராவூரணி,

பேராவூரணியில் புதிய பஸ் நிலையம் அருகில் நீலகண்டபுரம் செல்லும் ரெயில்வே கேட் நீண்ட நாட்களாக பழக்கத்தில் இருந்து வருகிறது. இந்தநிலையில் இந்த ரெயில்வே கேட்டை நடைபெற்று முடிந்த காரைக்குடி-திருவாரூர் அகல ரெயில் பாதை சீரமைப்பின் போது நிரந்தரமாக மூடுவதாக ரெயில்வேதுறை முடிவு செய்தது. இதனை எதிர்த்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக செல்லக்கூடிய கழனிவாசல், கொரட்டூர், சோழகனார்வயல், ஆதனூர், மணக்காடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். ரெயில்வே உபயோகிப்பாளர்கள் கூட்டமைப்பு சங்கம் ஏற்படுத்தி அவர்கள் மூலம் மத்திய, மாநில அமைச்சர்கள், ரெயில்வே துறை அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.

பாலம் கட்டுமான பணிகள்

தொடர்ந்து தஞ்சை மாவட்ட கலெக்டர், கோவிந்தராசு எம்.எல்.ஏ., வைத்திலிங்கம் எம்.பி. திருச்சி சிவா எம்.பி. ஆகியோரை சந்தித்து வலியுறுத்தினர். பலரின் கோரிக்கை ஏற்று நீலகண்டபுரத்தில் ரெயில்வே கீழ்பாலம் அமைக்க ரெயில்வே உயர்அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். அதன்பின்னர் கடந்த ஆண்டு (2018) ஆகஸ்ட் மாதம் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் இன்னும் முடியாததால் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள், மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்கின்றனர்.

அதிகாரிகள் நடவடிக்கை

தற்போது பேராவூரணி பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்த மழை தண்ணீர் கீழ்பாலத்தில் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. போக்குவரத்து மற்றும் நடந்து செல்வதற்கு கூட இந்த பாதை பயனற்ற நிலையில் உள்ளது. எனவே நீலகண்டபுரம் ரெயில்வே கீழ்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலம் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லையென்றால் ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் மற்றும் பேராவூரணி பொதுமக்கள் சார்பில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதும் என அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.


Next Story