பருவமழை தீவிரம்: 14 ஆண்டுகளுக்கு பின்னர் கோரையாற்றில் வெள்ளப்பெருக்கு


பருவமழை தீவிரம்: 14 ஆண்டுகளுக்கு பின்னர் கோரையாற்றில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 31 Oct 2019 11:00 PM GMT (Updated: 31 Oct 2019 8:00 PM GMT)

பருவமழை தீவிரமாக பெய்து வருவதை தொடர்ந்து, 14 ஆண்டுகளுக்கு பின்னர் கோரையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக குழுமாயி அம்மன் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது.

திருச்சி,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நேற்று 4-வது நாளாக தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக நகரில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையினால் பொன்னணியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

மேலும் அந்த பகுதிகளில் உள்ள காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த தண்ணீர் கோரையாற்றில் கலந்து திருச்சி நோக்கி வந்தது. இதன் காரணமாக கோரையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கோரையாற்று தண்ணீர் உய்யகொண்டானில் விழுந்து குடமுருட்டி வழியாக காவிரியில் கலக்கிறது. இதற்காக புத்தூர் ஆறு கண் பாலம் இருந்த இடத்தில் தொட்டிப்பாலம் கட்டப்பட்டு உள்ளது.

இந்த பாலத்தின் வழியாக வெளியேறும் தண்ணீர் அருவியில் கொட்டுவது போல் செல்வதை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல் கிறார்கள். கோரையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் உள்ள குழுமாயி அம்மன் கோவிலை தண்ணீர் சூழ்ந்து உள்ளது.

14 ஆண்டுகளுக்கு பின்னர்...

கோரையாற்றில் கடந்த 2005-ம் ஆண்டு பெய்த பலத்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் கரைகள் உடைந்து கருமண்டபம், தீரன் நகர் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு கோரையாறு, உய்யகொண்டான் வாய்க்கால் கரைகளை பலப்படுத்தும் பணிகள் சுமார் ரூ.200 கோடியில் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் கோரையாற்றில் தண்ணீர் அதிக அளவில் வரவில்லை. இந்நிலையில் தற்போது 14 ஆண்டுகளுக்கு பின்னர் கோரையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story