லாஸ்பேட்டையில் கழிவுநீரை அகற்றக்கோரி பா.ஜ.க.வினர் சாலை மறியல்


லாஸ்பேட்டையில் கழிவுநீரை அகற்றக்கோரி பா.ஜ.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Nov 2019 12:52 AM GMT (Updated: 2 Nov 2019 12:52 AM GMT)

லாஸ்பேட்டை நந்தா நகரில் கழிவுநீரை அகற்றக்கோரி பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு லாஸ்பேட்டை நந்தா நகரில் இருந்து வாய்க்காலில் வரும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பழுது ஏற்பட்டது.

எனவே நந்தா நகர் பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யாமல் அங்குள்ள பாரதி குளத்தில் திருப்பி விடப்பட்டது. அங்கு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசியதால், மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இது குறித்து அந்த பகுதி மக்கள் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் குளத்தில் தேங்கிய கழிவுநீரை உடனடியாக அகற்றவேண்டும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜ.க.வினர் நேற்று காலை லாஸ்பேட்டை மெயின்ரோட்டில் நந்தாநகரில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தொகுதி தலைவர் சோமசுந்தரம், நிர்வாகிகள் கவுரிசங்கர், ரஞ்சி, விஜய்பூபதி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குளத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அப்புறப்படுத்தவும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சரி செய்யவும் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தினை கைவிட்டு கலைந்துசென்றனர். சாலைமறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story