பஞ்சமி நில மீட்பு ஆணையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி


பஞ்சமி நில மீட்பு ஆணையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 2 Nov 2019 11:15 PM GMT (Updated: 2 Nov 2019 7:53 PM GMT)

பஞ்சமி நிலங்கள் மீட்பு ஆணையத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.

தர்மபுரி,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வனின் தாயார் பாப்பம்மாள், தந்தை மாரிபொன்னன் ஆகியோரின் படத்திறப்பு விழா தர்மபுரி அருகே அதியமான்கோட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தேவரசம்பட்டியில் உள்ள ஸ்ரீ லட்சுமி மகாலில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில செயலாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைசெயலாளர் மின்னல்சக்தி வரவேற்று பேசினார். கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன், மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன், மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, மாவட்ட செயலாளர்கள் ஜெயந்தி, ஜானகிராமன், கனியமுதன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கோட்டை கலைவாணன், மண்டல அமைப்பு செயலாளர் நந்தன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பாப்பம்மாள்- மாரிபொன்னன் ஆகியோரின் உருவப்படத்தை திறந்து வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். இந்த நிகழ்ச்சிகளில் கட்சியின் மாவட்ட பொருளாளர் மன்னன், மாவட்ட செய்திதொடர்பாளர்கள் பாண்டியன், பாரதிராஜா, இளஞ்சிறுத்தை எழுச்சிபாசறை மாநில துணைசெயலாளர் அதியமான், மாவட்ட செயலாளர் அம்பேத்வளவன், உழவர் பாதுகாப்பு இயக்க மாநில துணை செயலாளர் கிள்ளிவளவன், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் குபேந்திரன், பென்னாகரம் தொகுதி செயலாளர் கருப்பண்ணன், பென்னாகரம் ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி தமிழரசு நன்றி கூறினார்.

இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை இவ்வளவு காலம் தள்ளிப்போட்டது சட்ட விரோத செயல். உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 12 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பஞ்சமி நிலம் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. இதில் பெரும்பாலான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது பஞ்சமி நிலங்களை கண்டறிந்து மீட்பதற்கான ஆணையத்தை அமைத்தார். பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின்னர் அந்த ஆணையம் செயல்படவில்லை.

பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான ஆணையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளன? அவற்றில் எவ்வளவு நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளன? என்பதை கண்டறிந்து ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்டு ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். பஞ்சமி நிலங்கள் மீட்பு தொடர்பான விஷயத்தில் முன்பு எந்தவித கருத்தும் தெரிவிக்காத டாக்டர் ராமதாஸ், எச்.ராஜா ஆகியோர் அரசியல் ஆதாயத்திற்காக தற்போது கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

நிதி ஒதுக்க வேண்டும்

இதை வைத்து தி.மு.க.வை சீண்டுகிறார்கள். தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் கூறிய கருத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உரிய பதில் அளித்து உள்ளார். பஞ்சமி நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு அவர்கள் அறைகூவல் விடுத்து இருக்கிறார்கள். அதற்கு இதுவரை உரிய பதில் அளிக்கவில்லை. அரசியல் ஆதாயத்திற்காக பஞ்சமி நில மீட்பு குறித்து பேசுபவர்கள் மக்களிடம் அம்பலப்பட்டு போவார்கள்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரி நீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை தமிழக அரசு விரைவாக செயல்படுத்த நிதி ஒதுக்க வேண்டும். திரைப்படத்துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு தொல்.திருமா வளவன் எம்.பி. கூறினார்.


Next Story