வாகன சோதனையின்போது விபத்தில் காயமடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


வாகன சோதனையின்போது விபத்தில் காயமடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 Nov 2019 11:15 PM GMT (Updated: 2 Nov 2019 8:06 PM GMT)

செங்குன்றம் அருகே போலீஸ் வாகன சோதனையின்போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்தவர் யஸ்வந்த். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரியதர்ஷினி (வயது 22). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி செங்குன்றத்தை அடுத்த காந்திநகர் அருகே உள்ள திருவள்ளூர் நெடுஞ்சாலையில் பிரியதர்ஷினி மொபட்டில் வந்தபோது, அங்கு போலீஸ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஊர்காவல் படையைச் சேர்ந்த முனி என்பவர் பிரியதர்ஷினியை மறிக்க முயன்றார். இதனால் நிலைத்தடுமாறிய பிரியதர்ஷினி மீது அங்கு வந்த லாரி மோதியது.

இதில் பிரியதர்ஷினிக்கு இரண்டு கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் முனியின் மோட்டார் சைக்கிளை எரித்தனர். லாரியையும் அடித்து நொறுக்கி சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, பிரியதர்ஷினி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் நீண்ட நாட்களாக கால் வலியால் அவதிப்பட்டு வந்த பிரியதர்ஷினி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த தகவல் அறிந்து சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story