வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் மாணவ-மாணவிகள் இந்தியாவை மறக்காமல் இருக்க வேண்டும் - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு


வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் மாணவ-மாணவிகள் இந்தியாவை மறக்காமல் இருக்க வேண்டும் - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு
x
தினத்தந்தி 2 Nov 2019 10:15 PM GMT (Updated: 2 Nov 2019 8:29 PM GMT)

இந்தியாவில் படித்து வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் மாணவ-மாணவிகள், இந்தியாவை மறக்காமல் இருக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

மைசூரு,

மைசூரு வன்னி மண்டபத்தில் உள்ள ஜே.எஸ்.எஸ். பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தனி விமானம் மூலம் மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்துக்கு வந்தார். அவரை மாவட்ட பொறுப்பு மந்திரி சோமண்ணா, பிரதாப் சிம்ஹா எம்.பி., மேயர் புஷ்பலதா, கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் அவர், வன்னிமண்டபத்தில் உள்ள ஜே.எஸ்.எஸ். பல்கலைக்கழகத்துக்கு சென்று பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். இதையடுத்து வெங்கையா நாயுடு, ஜே.எஸ்.எஸ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த 650 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் மாணவ-மாணவிகள் மத்தியில் அவர் பேசியதாவது:-

நம் நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. இதனால் இந்தியாவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்யுங்கள். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் நீங்கள் எந்த நாட்டில் வேலை செய்தாலும் பிறந்து வளர்ந்த இந்த மண்ணை மட்டும் மறக்காமல் இருக்க வேண்டும். அதனை மாணவ-மாணவிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளில் வேலை பார்த்தாலும் இந்தியாவை மட்டும் மாணவ-மாணவிகள் மறக்கக்கூடாது. வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதவர்கள் நமது நாட்டிலேயே சேவை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் யோகாசனம் செய்து தனது உடல் ஆரோக்கியத்தை காப்பாற்றி கொள்ள வேண்டும். எந்த நோய்க்கும், மன நிம்மதிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் யோகாசனம் சிறந்த மருந்தாகும். தினமும் யோகாசனம் செய்வது உடலுக்கு மிகவும் நல்லது. அப்படி செய்தால் நோய்கள் வருவதை முன்கூட்டியே தடுக்கலாம். கர்நாடக மாநிலத்தில் ராகி, சோளம் போன்ற நல்ல, ஆரோக்கியமான உணவுகள் கிடைக்கிறது. இதுபோன்ற உணவு வகைகளால் நோய்கள் வருவதை எளிதாக தடுக்கலாம். இதனால் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.

கர்நாடகம் பசுமையான மாநிலமாக உள்ளது. இங்கு சிறுதானியங்கள் அதிக அளவில் விளைவிக்கிறார்கள். அதனை தங்கள் உடல் நலத்திற்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமி, மந்திரி சோமண்ணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து நிகழ்ச்சி முடிந்த பின்னர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். அதன்பின்னர் அவர், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

Next Story