காஞ்சி, வந்தவாசி, ஆரணியில் கந்தசஷ்டியையொட்டி சூரசம்ஹாரம்


காஞ்சி, வந்தவாசி, ஆரணியில் கந்தசஷ்டியையொட்டி சூரசம்ஹாரம்
x
தினத்தந்தி 2 Nov 2019 11:36 PM GMT (Updated: 2 Nov 2019 11:36 PM GMT)

காஞ்சி, வந்தவாசி, ஆரணியில் கந்தசஷ்டியை யொட்டி சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கலசபாக்கம்,

திருவண்ணாமலையை அடுத்த காஞ்சி குன்றுமேடு பாலமுருகன் சுப்ரமணியர் கோவிலில் கந்தசஷ்டியை யொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சி கோவில் அருகில் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) சாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.

கலசபாக்கத்தை அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர சிவசுப்பிரமணிய சாமி கோவிலும், தேவகிரி மலை தேவனாம்பட்டு சிவ சுப்பிரமணிய சாமி கோவிலிலும் கந்தசஷ்டி விழா நடைபெற்றது.

வந்தவாசி சத்புத்ரி நாயகி சமேத சுயம்பு ஜலகண்டேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டியை யொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மாலை கோவில் அருகில் தேரடி பகுதியில் சூரசம்ஹாரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆரணி, கொசப்பாளையம் பகுதியில் உள்ள வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 28-ந் தேதி முதல் லட்சார்ச்சனையுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று லட்சார்ச்சனை நிறைவு செய்யப்பட்டது. நேற்று அதிகாலை முதல் பெண்கள் கந்தசஷ்டி கவசத்தை பாடியபடி 108 முறை சன்னதியை சுற்றி வலம் வந்து வழிபட்டனர். இரவில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் வெளிவளாகத்தில் எழுந்தருளினார். அங்கு சூரசம்ஹாரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் ஆரணிப்பாளையம், பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள முருகர் கோவிலிலும் சூரசம்ஹாரவிழா நடந்தது. மேலும் அனைத்து முருகர் கோவில்களிலும் சூரசம்ஹார விழா நடைபெற்றது.

Next Story