அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 3 Nov 2019 11:00 PM GMT (Updated: 3 Nov 2019 4:54 PM GMT)

அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாந்தா கூறியுள்ளார்.

பெரம்பலூர்,

தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதிஉதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் அனைத்து பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்களில் 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் புனித பயணம் மேற்கொள்ள அனுமதித்தும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இந்த புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலியோ சமுத்திரம் மற்றும் கிறிஸ்துவமத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இந்த புனித பயணம் மேற்கொள்ள விருப்பமுள்ள கிறிஸ்தவர்கள் தங்களது விண்ணப்ப படிவங்களை www.bc-m-b-c-mw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவியிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.

தொடர்பு கொள்ளலாம்

இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து புனித பயணம் செல்ல விருப்பமுள்ள கிறிஸ்தவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-20 என்று குறிப்பிட்டு இயக்குனர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு வருகிற 30-ந்தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்புதல் வேண்டும். (நேரில் வரவேண்டியதில்லை). மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (மற்றும்) சிறுபான்மையினர் நல அலுவலர், கலெக்டர் அலுவலகம், சிறுபான்மையினர் நல இயக்குனரகம் மற்றும் 044-28520033 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story