கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க கூடாது இந்து முன்னணி நிர்வாகிகள், கலெக்டரிடம் மனு


கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க கூடாது இந்து முன்னணி நிர்வாகிகள், கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 4 Nov 2019 11:00 PM GMT (Updated: 4 Nov 2019 3:09 PM GMT)

கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க கூடாது. அதுதொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என இந்து முன்னணி நிர்வாகிகள், கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி மனுக்கள் வாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர்.

அந்த மனுக்களை அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி, விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ரத்து செய்ய வேண்டும்

இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

குமரி மாவட்டத்தில் 100–க்கும் மேற்பட்ட பழமையான கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் நிலங்கள் கோவில் பராமரிப்பு, பூஜை மற்றும் கோவில் காரியங்களுக்காக நமது முன்னோர்களால் அந்தந்த கோவில் சுவாமிகளின் பெயரில் கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் கோவிலுக்கு சொந்தமானவை. அரசுக்கு சொந்தமானது அல்ல. சமீபத்தில் தமிழக அரசு கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா கொடுக்கவும், தனியாருக்கு விற்கவும் அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது கோர்ட்டில் நடைபெற்று வரும் ஒரு வழக்கு தொடர்பாக தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூல பத்திரத்திலும் மேற்கண்டவாறே கூறியுள்ளது.

கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு இலவசமாக பட்டா வழங்கவும், அந்த நிலங்களை அவர்களே விற்பதற்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது பக்தர்களை மிகுந்த வேதனை அடைய செய்துள்ளது. எனவே இந்த அரசாணையை உடனே ரத்து செய்ய வேண்டும். கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூல பத்திரத்தையும் திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நடவடிக்கை

விசுவ இந்து பரி‌ஷத் மாநில இணைச்செயலாளர் காளியப்பன் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், நாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9–ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு புத்தகத்தை கொடுத்து, படிக்க வைத்து, தேர்வும் நடத்த உள்ளனர். எனவே சட்டத்துக்கு புறம்பாக பாடத்திட்டத்தில் இல்லாத புத்தகத்தை பள்ளி மாணவர்களிடம் கொடுத்து அதை படிக்க செய்து தேர்வு எழுத வைக்க முயற்சி செய்தவர்கள் மீதும், பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தர்மபுரம் அருகே உள்ள பிலாவிளையைச் சேர்ந்த தி.மு.க. வக்கீல் சரவணன் உள்ளிட்ட சிலர் கொடுத்துள்ள மனுவில், “சிறுவன் சுஜித் மரணம் போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 52 கிராமங்களில் 67 ஆழ்துளை கிணறுகளை பார்வையிட்டு, தடுப்பு வேலிகள் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு              செய்யவில்லை

மேக்காமண்டபத்தை அடுத்த மூலச்சல் அருகில் உள்ள வாலன்விளையைச் சேர்ந்த தாசைய்யன் (வயது 80) கொடுத்துள்ள மனுவில், எனது வீட்டருகில் எனக்கு சொந்தமான கிணறு உள்ளது. அந்த கிணற்று தண்ணீரைத்தான் நான் குடிப்பதற்கு பயன்படுத்தி வருகிறேன். கிணற்றின் அருகே மழைநீர் ஓடை உள்ளது. அதை அதேபகுதியைச் சேர்ந்த 2 பேர் அடைத்துவிட்டார்கள். இதனால் மழைநீர் தேங்கி, கிணற்று தண்ணீரை குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டால் என் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story