குளித்தலை அருகே மோட்டார் சைக்கிளில் சேலை சிக்கியதால் பெண் தவறி விழுந்து பலி


குளித்தலை அருகே மோட்டார் சைக்கிளில் சேலை சிக்கியதால் பெண் தவறி விழுந்து பலி
x
தினத்தந்தி 4 Nov 2019 10:15 PM GMT (Updated: 4 Nov 2019 7:09 PM GMT)

குளித்தலை அருகே மோட்டார் சைக்கிளில் சேலை சிக்கியதால் பெண் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள கம்பளியாம்பட்டியைச் சேர்ந்தவர் பெரியண்ணன் மனைவி சின்னம்மாள் (வயது 50). இவர் இதே பகுதியை சேர்ந்த தனது உறவினரான செல்லதுரை மகன் தனசேகர் (19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தனது ஊருக்கு நேற்று முன்தினம் சென்று கோண்டிருந்தார். குளித்தலை அருகே உள்ள இரும்பூதிபட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சின்னம்மாளின் சேலை மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் சிக்கியது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியது. மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் தவறி விழுந்து சின்னம்மாள், தன சேகர் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

பெண் பலி

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சின்னம்மாள் மட்டும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னம்மாள் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story