மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 4 Nov 2019 11:00 PM GMT (Updated: 4 Nov 2019 7:47 PM GMT)

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்காக கடந்த ஜூலை மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசன தேவைக்கு ஏற்றவாறு அதிகரித்தோ, குறைத்தோ மாறி, மாறி திறந்து விடப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த மழை மேட்டூர் அணை கால்வாய் பாசன பகுதிகளிலும் பெய்ததால், கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் தேவை மிகவும் குறைந்தது. இதனால் கால்வாய் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு, வினாடிக்கு 400 கனஅடியாக குறைக்கப்பட்டது.

கால்வாய் பாசனம்

இந்த நிலையில் பாசன பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்ததால், பாசனத்துக்கான தண்ணீர் தேவை அதிகரித்தது. இதன்காரணமாக நேற்று காலை முதல் கால்வாய் பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு, வினாடிக்கு 400 கனஅடியில் இருந்து வினாடிக்கு 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அதே நேரத்தில் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 10 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 9 ஆயிரத்து 400 கனஅடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் நீர் வரத்து சற்று அதிகரித்து உள்ளதால், நேற்று இந்த அளவு வினாடிக்கு 11 ஆயிரத்து 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 600 கனஅடி நீர் கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story