புதுவையும், தமிழகமும் நீர்வளமிக்க மாநிலங்களாக திகழ வேண்டும் கவர்னர் கிரண்பெடி விருப்பம்


புதுவையும், தமிழகமும் நீர்வளமிக்க மாநிலங்களாக திகழ வேண்டும் கவர்னர் கிரண்பெடி விருப்பம்
x
தினத்தந்தி 4 Nov 2019 11:00 PM GMT (Updated: 4 Nov 2019 10:05 PM GMT)

புதுவையும், தமிழகமும் நீர்வளமிக்க மாநிலங்களாக திகழ வேண்டுமென கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வார இறுதிநாட்களில் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அவருடைய முயற்சியால் கடந்த 2 ஆண்டுகளில் புதுவை, காரைக்காலில் மொத்தம் 406 குளங்கள், நீர் நிலைகள் தூர்வாரி கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பணிகளை பொதுப் பணித்துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, பல்நோக்கு பணியாளர்கள், தன்னார்வலர்கள், தனியார் நிறுவனத்தின் உதவியோடு செய்யப்பட்டது.

விருது வழங்கும் விழா

இந்த நிலையில் புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நீர்நிலைகளை தூர்வாருவதற்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது.

விழாவுக்கு புதுவை அரசு தலைமை செயலர் அஸ்வனிகுமார் தலைமை தாங்கினார். புதுச்சேரி கலெக்டர் அருண், காரைக்கால் கலெக்டர் விக்ராந்த் ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக மத்திய பெரு நிறுவனங்கள் விவகார அமைச்சகத்தின் தென்மண்டல இயக்குனர் பாட் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள், தனியார் நிறுவனத்தினர், தன்னார்வலர்கள் உள்பட பலருக்கு கவர்னர் கிரண்பெடி விருது வழங்கி கவுரவித்தார்.

நீர்வளமிக்க...

அதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:-

புதுச்சேரி, காரைக்காலில் அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் பங்களிப்புடன் குளங்கள், நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இந்த பணி 50 சதவீதம்தான் பூர்த்தியடைந்தது. இந்த ஆண்டில் இப்பணி 100 சதவீதம் முழுமை பெற்றுள்ளது. அடுத்த ஆண்டில் இப்பணி மேலும் சிறப்பாக அமைய வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதன் மூலம் புதுச்சேரி நீர்வளமிக்க மாநிலமாக விளங்கும். புதுவையும், தமிழகமும் நீர்வளமிக்க மாநிலங்களாக திகழ வேண்டும்.

அதேபோல் பசுமையான புதுச்சேரி உருவாக அனைவரும் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும். எனவே அவரவர் தங்களுடைய பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட முக்கிய தினங்களில் ஒரு மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story