பண்ருட்டியில் பட்டப்பகலில் துணிகரம், விவசாயியின் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.77 ஆயிரம் திருட்டு


பண்ருட்டியில் பட்டப்பகலில் துணிகரம், விவசாயியின் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.77 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 5 Nov 2019 9:30 PM GMT (Updated: 5 Nov 2019 1:00 PM GMT)

பண்ருட்டியில் பட்டப்பகலில் விவசாயியின் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.77 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள தாழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அரிராமன்(வயது 50). விவசாயி. இவருடைய மைத்துனர் சிரஞ்சீவி. இவர், சவுதிஅரேபியாவிற்கு வேலைக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்கு பணம் தேவைப்படும் என்பதால் அரிராமன், சிரஞ்சீவி மனைவி சந்திரலேகா ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் நேற்று காலையில் பண்ருட்டியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு வந்தனர்.

அங்கு சந்திரலேகா தனது நகையை விற்றார். அதை வாங்கிய கடையின் உரிமையாளர், வங்கி கணக்கில் பணத்தை போட்டுவிட்டதாகவும், வங்கியில் சென்று எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

இதையடுத்து அரிராமனும், சந்திரலேகாவும் பண்ருட்டி–கும்பகோணம் சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று ரூ.77 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்தனர். பின்னர் இருவரும் பண்ருட்டி பஸ் நிலையத்துக்கு வந்தனர்.

அங்கு ஓரிடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, இருவரும் கடைக்கு சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் பெட்டி திறந்து கிடந்தது. அதில் இருந்த பணத்தை காணவில்லை. இதனால் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அரிராமனும், சந்திரலேகாவும் வங்கியில் பணத்தை எடுத்துக்கொண்டு, மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து விட்டு வந்ததை நோட்டமிட்ட மர்மநபர், அதனை திருடிச்சென்றது தெரியவந்தது. இது பற்றி அரிராமன், பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story