வைகை அணையை ஆக்கிரமிக்கும் ஆகாயத்தாமரை செடிகள்-தண்ணீர் மாசுபடும் அபாயம்


வைகை அணையை ஆக்கிரமிக்கும் ஆகாயத்தாமரை செடிகள்-தண்ணீர் மாசுபடும் அபாயம்
x
தினத்தந்தி 5 Nov 2019 10:30 PM GMT (Updated: 5 Nov 2019 3:17 PM GMT)

வைகை அணையை ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவு ஆக்கிரமித்துள்ளதால் தண்ணீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து மதுரை மாநகர் மற்றும் தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, சேடப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் வடகிழக்கு பருவமழையின் காரணமாக தற்போது 65 அடியாக உயர்ந்துள்ளது.

பொதுவாக வைகை அணையின் முன்புறமுள்ள பேபிடேம் பகுதியில்தான் அதிகளவில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து காணப்படும். ஆனால் தற்போது அணையின் பிரதான பகுதியை அதிகளவில் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளன. மேலும் அணையின் முன்பகுதியில் குடிநீருக்காக தேக்கி வைக்கப்பட்டு இருக்கும் தண்ணீரிலும் அதிகளவு ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளது.

இதனால் தண்ணீர் முழுவதும் மாசடையும் அபாயம் உருவாகியுள்ளது.

ஆகாயத்தாமரை செடிகள் அதிகவளர்ச்சியுடன் வேகமாக படரும் தன்மை கொண்டது. எனவே கேடுவிளைவிக்கும் ஆகாயத்தாமரை செடிகள் வைகை அணை முழுவதும் படர்வதற்கு முன்பாக அவற்றை அப்புறப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story