பெரம்பலூரில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்-காத்திருப்பு போராட்டம்


பெரம்பலூரில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்-காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 5 Nov 2019 11:00 PM GMT (Updated: 5 Nov 2019 5:56 PM GMT)

பெரம்பலூரில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் கடந்த 5 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை துறைமங்கலத்தில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மின்வாரியத்தில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், களப்பணியாளர்கள், நிரந்தர பணியாளர்கள் செய்யும் அனைத்து பணிகளையும் ஒப்பந்த தொழிலாளர்களாக நாங்கள் செய்து வருகிறோம். இயற்கை இடர்பாடுகளின் போது மீட்பு பணிக்காக மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கடுமையாக உழைத்துள்ளோம். அந்த நேரத்தில் மின் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்திட அரசு வாக்குறுதிகள் தந்துவிட்டு செயல்படுத்த வில்லை. எனவே கடந்த 12 ஆண்டுகளாக பணி நிரந்தரம் கேட்டு போராடிவரும் எங்களை காலி பணியிடங்களில் நியமித்து பணி நிரந்தரம் செய்யவேண்டும்.

காத்திருப்பு போராட்டம்

இதற்கிடையில் 5 ஆயிரம் கேங்க்மேன் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து பயிற்சி கொடுக்கத்திட்டமிடப்பட்டுள்ளது. இதனை கைவிட்டு தினக்கூலி தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும் மாலை 5 மணி வரை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு உட்கார்ந்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் மணி உள்பட 40-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story