திருத்துறைப்பூண்டி அருகே பயங்கரம்: மூதாட்டியை கழுத்தை அறுத்து கொன்ற சலவை தொழிலாளி கைது


திருத்துறைப்பூண்டி அருகே பயங்கரம்: மூதாட்டியை கழுத்தை அறுத்து கொன்ற சலவை தொழிலாளி கைது
x
தினத்தந்தி 5 Nov 2019 10:15 PM GMT (Updated: 5 Nov 2019 6:48 PM GMT)

திருத்துறைப்பூண்டி அருகே மூதாட்டியை கழுத்தை அறுத்து கொன்ற சலவை தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். பணம் திருடியதை பார்த்ததால் தீர்த்து கட்டியதாக போலீசாரிடம், அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மருதவனம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 65). விவசாயி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி(60). இவர்களுக்கு உமாதேவி என்ற மகளும், கோவிந்தசாமி என்ற மகனும் உள்ளனர். உமாதேவிக்கு திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார். கோவிந்தசாமிக்கும் இன்னும் திருமணமாகவில்லை. இவர் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் ராமச்சந்திரன் வீட்டில் நேற்று முன்தினம் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ராஜேஸ்வரி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சலவை தொழிலாளி கைது

இந்த கொலை தொடர்பாக போலீசார் திருத்துறைப்பூண்டி மடப்புரம் பிள்ளைத்தெருவை சேர்ந்த சலவை தொழிலாளியான முருகானந்தம்(38) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ராஜேஸ்வரியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார், முருகானந்தத்தை கைது செய்தனர்.

கைதான முருகானந்தம் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டு வீசிய கஜா புயலால் மடப்புரத்தில் உள்ள எனது வீடு சேதமடைந்தது. இதனால் குடும்பத்துடன் நான் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வசித்து வந்தேன். அதே நேரத்தில் மடப்புரத்தில் உள்ள வீட்டில் சலவை தொழில் செய்து வந்தேன். நான் வீடு, வீடாக சென்று துணிகளை வாங்கிகொண்டு வந்து சலவை செய்து கொடுப்பது வழக்கம்.

ரூ.10 ஆயிரம் திருட்டு

இதேபோல நேற்று முன்தினம் சலவைக்கு துணி வாங்குவதற்காக ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்றேன். அப்போது அங்கு ராமச்சந்திரன் தன்னை மோட்டார் சைக்கிளில் திருத்துறைப்பூண்டியில் விட முடியுமா? என்று என்னிடம் கேட்டார். அதற்கு சம்மதம் தெரிவித்த நான், அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு திருத்துறைப்பூண்டியில்இறங்கிவிட்டேன்.

ராமச்சந்திரனின் மனைவி ராஜேஸ்வரி வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட நான், ராமச்சந்திரன் முக்கியமான பொருளை வீட்டில் மறந்துவிட்டு சென்றதாகவும் அதை என்னை எடுத்து வர சொன்னதாகவும் ராஜேஸ்வரியிடம் கூறி வீட்டிற்குள் நுழைந்தேன். பின்னர் வீட்டுக்குள் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடினேன். அதைப்பார்த்த ராஜேஸ்வரி சத்தம் போட்டார். இவரை உயிரோடு விட்டால் நம்மை காட்டி கொடுத்து விடுவார் என நினைத்து கத்தியால் ராஜேஸ்வரியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினேன்.

இவ்வாறு அவர் அந்தவாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.


Next Story